தEொலைக்காட்சி-வானொலி நிகழ்ச்சிகள் ”வானொலி நிகழ்ச்சிகளைச் செவிவழியாக மட்டுமே கேட்டு உணரமுடியும் என்பதால் வானொலி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும்போது சொற்களைக் கவனமாகப் பயன்படுத்தவேண்டும். வானொலி மூலம் செய்திகளைக் கேட்பவர்களுக்குப் பொருள் மயக்கம் ஏற்படாதவாறு சொற்களைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் கூறுதல் வேண்டும். நெடுந் தொடர்களையும் கடினமான சொற்களையும் தவிர்த்து, செய்திகளின் உணர்ச்சிக்கேற்றவாறு குரல் ஏற்ற இறக்கத்துடன் பேச அல்லது வாசிக்க வேண்டும். வானொலிக்காக எழுதித் தயாரிக்கப்படும் கதைகளிலும் நாடகங்களிலும் குறைந்த எண்ணிக்கையிலான கதாபாத்திரங்கள் இடம்பெறுதல் வேண்டும்.
மெய்ப்பாடுகள், சூழல், கதாபாத்திரங்கள், உயர்திணை அஃறிணைப் பொருள்கள் முதலானவற்றின் வெளிப்பாடுகளைச் சொற்களின் மூலமாகவும் ஒலியின் மூலமாகவும் வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் எழுதப்பட வேண்டும். வானொலி நிகழ்ச்சிகளுக்கு எழுதுவதை விட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு எழுதுவது எளிதான செயலாகும். தொலைக்காட்சியில் காட்சிகளின் மூலம் கதாபாத்திரங்கள், சூழல், மெய்ப்பாடுகள் முதலானவற்றை வெளிப்படுத்த முடியும். இதில் எழுத்துக்கலையைவிட நடிப்புக்கலை முதன்மை இடத்தைப் பெறுகின்றது.
எனவே, கதைக்கேற்ற நடிகர்களைத் தேர்வு செய்வது நிகழ்ச்சித் தயாரிப்பாளரின் கடமையாகும். தொலைக்காட்சி நாடகங்கள், தொடர்கள் முதலியவை எழுத்தாளர்களின் சொந்த படைப்பாகவும் புராணக் கதைகளாகவும் புதினங்களாகவும் அமையும்.’’ என்று அவர் சொல்லி முடித்தார். அடுத்து செய்தி அறைக்குச் சென்று செய்தி வாசிப்பாளரைச் சந்தித்தோம். அவர் தொலைக்காட்சி, வானொலியில் செய்தி வாசிப்பிற்கான தயாரிப்புகள், உத்திகள் பற்றிச் சில தகவல்களை எங்களிடம் பகிர்ந்துகொண்டார்.