(மக்கள் தEொடர்பு-எதிரொலி) சென்னைத் தொலைக்காட்சியின் ‘எதிரொலி’ நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்று ‘எதிரொலி நல்லதம்பி’ என்று அழைக்கப்படுபவர் முனைவர் வெ.நல்லதம்பி. இவர் பள்ளிப் படிப்பை மணப்பாறையிலும், பட்டப் படிப்பினை சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் முடித்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். முதல் வரை திருநெல்வேலியிலும் திருச்சியிலும் அகில இந்திய வானொலி நிலையங்களில் நிகழ்ச்சி அறிவிப்பாளராகப் பணிபுரிந்தார்.
பிறகு வாசிங்டனில் உள்ள ‘வாயஸ் ஆப் அமெரிக்கா’ வானொலி நிலையத்தில் அறிவிப்பாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். அதன் பிறகு சென்னைத் தொலைக்காட்சி நிலையத் தயாரிப்பாளராகவும் நிலைய உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். இவர் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி ஆகியவற்றை நாடக வடிவில் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது சிலப்பதிகார நாடக நூல் ‘நூபுர் க ஸ்வர்’ என்ற பெயரில் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுப் புதுதில்லி வானொலியில் ஒலிபரப்பானது குறிப்பிடத்தக்கது.
‘ டெலிவிஷன்’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்க் கலைச் சொல்லை உருவாக்க முயன்றபோது பலரும் பல சொற்களை உருவாக்கியளித்தனர். இருப்பினும் இவர் முன் மொழிந்த ‘தொலைக்காட்சி’ என்ற சொல்லே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றும் பயன்பாட்டில் உள்ளது. தொலைக்காட்சியிலும் வானொலியிலும் செய்தி வாசிப்பவர்களுக்கும் நிகழ்ச்சி அறிவிப்பாளர்களுக்கும் தமிழ் மொழியினை உச்சரிப்புப்பிழையின்றிப் பேச இவர் பயிற்சியளித்துள்ளார். இரண்டாவது, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடுகளில் பிற நாட்டுத் தமிழறிஞர்களிடம் நேர்காணல் நிகழ்த்தி அதனைப் படத்துடன் ஆவணப்படுத்தியுள்ளார்.
இவர் ஓய்வுக்குப் பின் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தில் உள்ள கல்வித் தொலைக்காட்சிப் படப்பதிவு நிலையத்தில் சிறப்பு அலுவலராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். மேலும், இவரது கல்விப் பணியினைப் பாராட்டி ‘மால்கம் ஆதிசேஷய்யா’ என்னும் விருது வழங்கியுள்ளனர்.