மொழிப்பயன்பாடு ஒரு புதினம் அதன் கதைக்கரு, சூழல், காலம், கதைக்களம் ஆகியவற்றுக்குப் பொருந்தும்படியான மொழிநடையில் அமைதல் நலம். நடை என்பது ஓர் எழுத்தாளனின் தனிப்பட்ட திறன் அடிப்படையிலான விளைவு. அது அவனது படைப்பாளுமையை நிர்ணயிக்கும் அளவீடாகவும் விளங்குகிறது. படைப்பாளன் தனக்கேயுரிய சொற்கள், சொல்லாட்சிகளைப் பயன்படுத்தலாம்.
அது அவனது படைப்பு மனத்தின் வெளிப்பாடு. ஆனால், தன் நடை குறித்த விழிப்புணர்வு ஒரு படைப்பாளனுக்கு இருக்கவேண்டும். இல்லையெனில், தE டர்ந்து வரும் ஒரே மாதிரியான சொல்லாட்சிகள் புதினத்தின் கலைத்தன்மையைக் குறைத்து, சலிப்புக்குள்ளாக்கிவிடும். புதினத்தில் வெறுமனே தகவல்களாக அளித்துச் செல்வதும் அதன் போக்கைப் பலவீனப்படுத்திவிடும்.
ஓர் அறையைப்பற்றி எழுதவேண்டுமென்றால், அதன் பொதுத்தன்மை, தனித்தன்மை இரண்டையும் சுருங்கக் குறிப்பிட்டால் போதும்.