பிள்ளைக்கூடம் XI Std Tamil வளமை யும் வறுமையும் வாழ்க்கையென்னும் நாணயத்தின் இருபக்கங்களாகும். வறுமையில் செம்மையாய் வாழ அறிவுறுத்துவது கல்வி. இம்மாண்பு சிலருக்கு இயல்பிலேயே கைகூடும். வளமான மனையில் பிறந்த பெண்ணொருத்தி, குறைந்த வளமுடைய தலைவன் வீட்டிலும் தன்னிலை மாறாது வறுமையிற் செம்மையாய் வாழ்கின்ற காட்சியைப் படம் பிடிக்கிறது நற்றிணையின் இப்பாடல்.
திணை : பாலை துறை : மகள் நிலை உரைத்தல் கூற்று : தலைவி இல்லறம் ஆற்றும் செவ்வியைப் பாராட்டிச் செவிலித்தாய் நற்றாயிடம் கூறியது. கூற்று விளக்கம்: திருமணம் முடிந்து கணவன் வீட்டில் வசிக்கும் தலைவியைக் காணச் சென்றுவந்த செவிலி, நற்றாயிடம் மகள் வறுமையிலும் செம்மையாக வாழ்வதைச் சொல்லி, இத்தகைய இல்லற அறிவை எப்படிப் பெற்றாள் என வியந்து கூறுதல். துறை விளக்கம்: ”மகள் நிலை உரைத்தல்” என்பது தலைவனோடு உடன்போகிய விளையாட்டுப் பருவம் மாறாத மகள் இல்லறம் ஆற்றும் பாங்கை நற்றாயிடம் செவிலித்தாய் எண்ணிக் கூறுவது. இத்துறை ”மனைமருட்சி” என்றும் கூறப்படும்.
சொல்லும் பொருளும் பிரசம் – தேன்; புடைத்தல் – கோல கொண்டு மிரட்டுதல்; கொழுநன் குடி – கணவனுடைய வீடு; வறன் – வறுமை; கொழுஞ்சோறு – பெருஞ்செல்வம்; உள்ளாள் – நினையாள்; மதுகை – பெருமிதம். தித்திக்கும் தேனும் பாலும் பொற்கிண்ணத்தில் கலங்க ஒருவாய் சுவைக்கவும் ஒவ்வாமை காட்டி முத்துப் பந்தலில் ஓடி விளையாடி மூச்சிறைக்க வைத்த செல்லச் சிறுமகள் மலர்ச்செண்டும் தோற்க வளமனை சாடி மறுகை மறுத்து மறைவாள் அன்று இன்றோ ஒருநேர உணவே அமிழ்தென நுகரும் பெருந்தனப் பாங்கு பெற்றது எங்கே? இல்லவன் செல்வத்து இருப்புக்கு ஏற்ப பிறரை நயவாப் பொருளியல் பெருமிதம் பேரறிவு ஒழுக்கம் பெற்றது எப்படி? பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால் விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப் புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் உண்என்று ஒக்குபு புடைப்பத் தெண்ணீர் முத்தரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று அரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர் பரீஇ மெலிந்துஒழியப் பந்தர் ஓடி ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்தனள் கொல் கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் ஒழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே.