. சிறுகதை எழுதும் கலை சிறுகதை என்பது ஒரு புத்திலக்கிய வடிவம். மரபான இலக்கியம் ஏற்கெனவே சமூகத்தில் உள்ள கருத்துகளையும் நம்பிக்கைகளையும் வலியுறுத்தும் போக்கு கொண்டது. ஆனால் புத்திலக்கியம் அவற்றை ஒட்டியோ, மறுத்தோ மறுபரிசீலனை செய்து பேசும் போக்கைக் கொண்டது.
சிறுகதைக்கென்று ஒரு தனித்த வடிவச்சிறப்பு உண்டு. சிறிய கதைகளாக இருப்பனவற்றை எல்லாம் நாம் சிறுகதைகள் என்று சொல்லிவிட முடியாது. நீதிக்கதைகள், உதாரணக்கதைகள், உருவகக்கதைகள், பஞ்சதந்திரக்கதைகள் மற்றும் ஈசாப் குட்டிக்கதைகள் போன்றவை எல்லாம் சிறிய கதைகள்தாம் என்றாலும் அவை சிறுகதைகள் அல்ல. ஒரு சிறிய கதையைச் சிறுகதையாக்குவது கதையின் முடிவில் உள்ள திருப்பம் என்று சொல்லலாம்.
சிறுகதையின் நோக்கம் ஒரு கதையின் மையக்கருத்தைச் சொல்வது மட்டுமன்று. ஒரு திருப்பத்தைச் சொல்லி, அதன்மூலம் வாசகனைக் கதையனுபவத்தில் பங்கேற்கச் செய்வதும்தான். அச்சு ஊடகப் பெருக்கத்தினால் சிறுகதைகள் நிறைந்திருக்கின்ற இக்காலத்தில் வாசகனின் ஆர்வத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே, வாசகன் ஊகிக்க முடியாத அல்லது அவன் ஊகிப்பதற்கு மாறான ஒரு திருப்பத்தோடு சிறுகதை அமைவது அவசியமாகிறது.