படிப்போம் சுவைப்போம் விருந்தொன்றில் கலந்துகொண்ட அனைவருக்கும் பழம்பால் வழங்கப்பட்டது. அங்கிருந்த புலவர், மற்றொருவரிடம், “பண்புத்தொகையா? உம்மைத்தொகையா?“ என்று வினவினார். இவர், புலவர் கூறியதன் பொருள் புரியாமல் விழித்தார்.
“என்ன ஐயா, விளங்கவில்லையா? பழம்பால் என்று கூறினால், பண்புத்தொகை. (பழைமை + பால்). அதாவது, பழைய பால் பழம் பால் என்று கூறினால், உம்மைத்தொகை.
(பழம் + பால்) அதாவது, பழமும் பாலும். புரிந்ததா“ என்று புலவர் விளக்கினார். அவரின் சிலேடை நயத்தைக் கேட்டு, இவர் வியப்பில் ஆழ்ந்தார். (பால் பழம் எனக் கூறினால், உம்மைத்தொகை மட்டுமே வரும்.) பெரும்புலவர் ஒருவர் விருந்துண்ணச் சென்றார்.
விருந்து முடிந்ததும், அவர் பருகுவதற்குப் பால் வழங்கப்பட்டது. அந்தப் பாலில் ஒரு சிற்றெறும்பு கிடந்தது. அதனைக் கண்டதும் அவர், “பாற்கடலில் சீனிவாசன் பள்ளி கொள்கிறான்“ என்றார். அவர் கூறியதன் பொருள் விளங்காமல், அருகிலிருந்தவர்கள் வியப்புடன் நோக்கினர்.
அதற்கு அப்பெரும்புலவர், ‘சீனி (சருக்கரை) யின் வாசத்தை அறிவது எறும்புதானே! அதனால், எறும்பைச் சீனிவாசன் என்று கூறலாமல்லவா! இந்தப் பாலில் எறும்பு இருப்பதைப் பாருங்கள். அதைச் சுட்டவே, “பாற்கடலில் சீனிவாசன் பள்ளி கொள்கிறான் என்று கூறினேன்“ என விளக்கம் தந்தார்.
பாற்கடலில் சீனிவாசன் – இருபொருள் • திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள இறைவன் • சீனியின் வாசம் அறியும் எறும்பு