-கே. பாலமுருகன், மலேசியா பெரிய மாமா வந்ததும் அதுவரை வீடு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து திடீரென்று தளரவிட்டதைப் போல உடைந்தது. அப்பா கதறி அழும்போது உடன் யாராலும் அழாமல் இருக்க முடியவில்லை. இதுவரை எதற்குமே சட்டென அழாத ஒருவர்.
அப்படி அழுது கதறும்போது உடல் சிறுத்துக் குழந்தையாகி எல் லோரின் மடியிலும் விழுகிறார். மா ணிக்கம் பக்கத்து வீட்டுக்காரர். அப்பாவிற்கு நெருக்கமான ஒரே ஆள் அவர்தான். அப்பாவிற்குச் சொல்லும்படியாக நண்பர்கள் அவ்வளவாக இல்லை.
அடுத்தவீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதுகூட அப்பாவிற்குத் தெரியாது. இரண்டு வயது குழந்தையின் மரணம் யாரையும் சமாதானப்படுத்தக் கூடியதல்ல. வருவோர் போவோர் அனைவரும் புலம்பியபடியே இருந்தனர். ஆகக் கடைசியாக ஒரு புலம்பலையே விட்டுப் போய்க்கொண்டிருந்தனர்.
வீட்டில் அவன் கடைசிப் பையன். அப்பா எப்படிப் பாட்டிக்குத் தாமதமாகப் பிறந்த கடைசிப் பையனோ, அதேபோலத் தம்பியும் அப்படித் தான். பின்கட்டிலிருந்து முன்வாசலுக்கு ஓடிவரும் சிறிய இடைவெ ளியில் சட்டென முடிந்து விட்ட வாழ்க்கை. “சாக வேண்டிய வயசாடா இது...?
என்ன விட்டுட்டுப் போய்ட்டியேடா,” என அப்பா மீண்டும் தரையை ஓங்கியடித்தபடியே அழுதார். பேபி குட்டி தலைவிரித்த கோலமாய் அப்பொழுதுதான் வெளியில் வந்தாள். சிரிப்பே இல்லாத பொக்கை வாய். கண்கள் இரண்டும் உள்ளே சொருகிக் கிடந்தன.
பேசுவதை உடனே புரிந்துகொள்ள முடியாது. ஒரு சொல்லை உச்சரிக்கவே நிதானமாக அடுக்குவாள். அவளுடன் உரையாடப் பொறுமை தேவைப்படும். ஆனால், ஓயாமல் வேலை செய்துகொண்டே இருப்பாள்.
அப்பாவின் அம்மா. மெலிந்துபோன தேகம். அதன் மேலே எப்பொழுதும் தொங்கும் ஒரு கலர் துண்டு. வெளுத்தக் கைலி.
தாடைவரை நீண்டு தொங்கும் காதுகள். ஆனால், தூரத்திலிருந்து வருபவர்களையும் பேசுபவர்களையும் அவளால் உன்னிப்பாகக் கேட்கவும் பார்க்கவும் முடியும். அவள் யாரையும் பொருட்படுத்தியதே இல்லை. “அடியே பேபி குட்டி… உன் பேரனப் பாத்தியா?” என அவள் வயதை ஒத்த மூக்குத்திக் கிழவி தூரத்திலிருந்து அரற்றிக் கொண்டே ஓடிவந்தாள்.
பேபி குட்டி வீட்டுக்கு வெளியில் வந்து ஓரமாய் வைக்கப்பட்ட துடைப்பைக் கட்டையை எடுத்து வாசலைப் பெருக்கத் தொடங்கினாள். அது பேபி குட்டியின் அன்றாட வேலை. எந்தச் சலனமும் இல்லாமல் ஏற்கனவே சுத்தமாக இருந்த வாசலைப் பெருக்கினாள். அவளுடைய வேலைகளை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடிந்ததில்லை.
“இந்தக் கெழவிக்கு எத்தன வயசாகுது... போய்ச் சேர வேண்டியதெல்லாம் நல்ல திடக்காத்தரமா இருக்கு...கடவுளுக்கு என்ன கேடு? இந்தச் சின்ன பையனைக் கொண்டு போய்ட்டா ரு...” வந்தவர்களில் யாரோ சொன்னது அங்கிருந்தவர்களின் மௌனத்தைக் கலைத்தது. 11th Advance Tamil - - - :