வழுவமைதி பசுவைப் பார்த்து, ‘ ‘ என் அம்மை வந்தாள்“ எனக் கூறுவது உண்டு. பசு என்பது, அஃறிணையாயினும், அன்பு மிகுதியால் உயர்திணைக்குரிய பெயரைப் பெற்றுள்ளது. இத்தொடர், இலக்கணக் குற்றமுடையதாயினும் சான்றோரால் ஏற்றுக்கொள்ளப் பெற்றமையால் வழுவமைதி ஆயிற்று. இலட்சுமி எனப் பசுவைப் பெயரிட்டு அழைப்பது, ஆண் குழந்தையைப் பெண் குழந்தையைக் குறிக்கும் சொல்லாலும் (வாடி கண்ணே) பெண் குழந்தையை ஆண் குழந்தையைக் குறிக்கும் சொல்லாலும் ( வாடா செல்லம்) கூறுவனவெல்லாம் வழுவமைதிகளே.
இன்றைய நடைமுறைப் பேச்சில், இளைஞர்களும் இளம்பெண்களும் தங்களுக்குள் எதிர்பாலினரைக் குறிக்கும் சொற்களைப் பயன்படுத்துவதனைக் காணலாம். ஆகவே மொழி என்பது, இலக்கண வரம்புக்கு உட்பட்டதாயினும் சிலபோது விதிமீறல், வரம்பு மீறல் ஆகியன ஏற்படுகின்றன. அவை ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை ஏற்றுக் கொள்வதற்கு இலக்கண நூலார் வகுத்ததே வழுவமைதியாம். காவிரி பொங்கி வருகிறாள் - இத்தொடர் வழுவமைதியா?