திரைக்கதை திரைக்கலை நுட்பங்களைக் கவனத்தில் கொண்டே திரைக்கதையை உருவாக்க வேண்டும். ஏனெனில், கேட்பதற்கான வடிவம் கதை. கேட்பதற்கும் பார்ப்பதற்குமான வடிவம் திரைக்கதை. தேர்ந்தெடுத்த கதையைப் பார்ப்போரின் மனநிலையைக் கருத்தில் கொண்டு காட்சிகளை வரிசைப்படுத்திக் கட்டமைப்பது திரைக்கதை.
கதை நகர்விற்கு ஒவ்வொரு காட்சியும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் திரைக்கதையை உருவாக்குபவரின் மனவோட்டத்தில் காட்சிக்கான சூழல், காட்சிக் களம், கதை நகர்வு ஆகியன நினைவில் கொள்ளப்படுகின்றன. கதைக்கும் திரைக்கதைக்கும் வேறுபாடு உண்டு. கேட்கச் சொல்வது கதை. சொல்வதும் காட்டுவதுமானது திரைக்கதை.
ஒலியை எழுதினால் அது கதை. ஒலி, ஒளி இரண்டையும் எழுதினால் அது திரைக்கதை ஆகும். ஒரு படத்தின் தEொடக்கம் முதலாக முடிவு வரையிலும் ஒவ்வொரு காட்சியாகத் திரைமொழியில் காட்சி வருணனை, உரையாடல், நடிப்பு முதலிய செய்திகளை இயக்குநரின் படப்பிடிப்பிற்குத் துணைபுரிகின்ற வகையில் எழுத்துவடிவில் குறித்து வைக்கும் விளக்கக் குறிப்பே திரைக்கதை (Sreen Play).