கையறுநிலை தம் மன்னன் இறந்ததற்குக் குடிமக்களும் சான்றோரும் வீரர்களும் வருந்திப் பாடுவது கையறுநிலை என்னும் துறையாகும். எந்த இழப்பையும் எண்ணி வருந்துவது கையறுநிலைத் துறைக்குரியது. இளையோர் சூடார் வளையோர் கொய்யார் நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியாள் ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே - புறநானூறு ஆசிரியர்: குடவாயிற் கீரத்தனார் திணை: பொதுவியல் துறை: கையறுநிலை பாடல் பொருள்: ஒல்லையூர் நாட்டை ஆண்ட அரசன் பெருஞ்சாத்தன். அவன் இறந்த பின்னர் அந்நாட்டில் பூத்துக்கிடந்த முல்லைப் பூவை யாருமே சூடவில்லையாம்.
இளைய வீரர் சூடவில்லை. வளையல் அணிந்த மகளிர் சூடுவதற்காகப் பறிக்கவில்லை. பாணர் தம் வளைந்த யாழைப் பயன்படுத்திக் கீழே இழுத்துப் பறித்துத் தலையில் சூட்டிக்கொள்ளவில்லை. பாடினியும் அணிந்துகொள்ளவில்லை.
அப்படி இருக்கும்போது, முல்லைப்பூவே! ஒல்லையூர் நாட்டில் எதற்காகப் பூக்கிறாய்?