பேச்சுக்கலை 'வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்' என்று சொல்லக் கேட்டிருப்போம். பேச்சின் மூலம் எண்ண ஓட்டங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியும். தனிமனிதனின் தேவைக்கு மட்டுமல்லாம ல் சமூகத்தின் தேவைக்கும் பேச்சுக்கலை அவசியமாகும். கருத்து வெளிப்பாட்டிற்கான பேச்சுமொழி, கலை வடிவமாக உருப்பெற்றுச் சமூகத்தின் மிக இன்றியமையாத அடையாளமாகவும் ஆளுமைத் திறனாகவும் வளர்ந்திருக்கிறது.
இதன் காரணமாகவே ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்து ஒன்றாம் புலவர் வார்த்தை பதினாயிரத்து ஒருவர் என்று ஒளவையார் பாடியுள்ளார். கற்றறிந்த அறிஞர்கள் கூடியிருக்கும் உயர்ந்த சபைகளில் அமரும் தகுதி, நூறுபேரில் ஒருவருக்கே கிடைக்கும். ஆயிரம் பேரில் ஒருவரே கவிஞராகத் திகழ்வார். ஆனால், பத்தாயிரம் பேரில் ஒருவரே சிறந்த பேச்சாளராகத் திகழ்வார் என்று ஒளவையார் வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய ஆற்றல்வாய்ந்தது பேச்சுக்கலை.