வைணவம் நாராயணனாகிய திருமாலின் பெயரை அன்போடு உச்சரிப்பதால் அடியவர்கள் எய்தும் நன்மையை பூதத்தாழ்வார் பின்வரும் பாடலால் உணர்த்துகிறார். ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள் தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் - வானத் தணியமர ராக்குவிக்கு மஃதன்றே நாங்கள் பணியமரர் கோமான் பரிசு. பாடல் பொருள்: ஞானத்தால் நன்றாக உணர்ந்து திருமாலின் திருப்பெயர்களை அன்பின் உச்சியில் நின்று சொன்னால், தேவருலகிற்கு அணியாகவுள்ள இறைவனோடு என்றும் உடன் உறைபவர்கள் போலே நம்மை இறைவன் ஆக்குவான். ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழிப் பாசுரங்களைப் பாடும் அடியவர்கள் துன்பம் நீங்கப்பெறுவர் என்பதைக் கீழ்வரும் பாடல் கூறுகிறது.
அல்லல் விளைத்த பெருமானை ஆயர் பாடிக் கணிவிளக்கை வில்லி புதுவை நகர்நம்பி விட்டு சித்தன் வியன்கோதை வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிகவிரும்பும் சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே பாடல் பொருள்: வில்லிபுத்தூர் நகர் நம்பி விஷ்ணு சித்தன் என்ற பெரியாழ்வாரின் மகள் கோதை. வில் போன்ற அழகிய புருவத்தை உடையவள். கொடியவர்களுக்குத் துன்பம் விளைவித்த பெருமானை, ஆயர்பாடிக்கு அழகான விளக்காகத் திகழும் கண்ணனைப் புகழ்ந்து இவள் பாடிய பாசுரங்களைப் பாடிப்பரவுவோர் துன்பமாகியக் கடலுள் மூழ்கித் துவள மாட்டார்கள். 12th Std - Advance Tamil - Chaper - - :